வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பரப்பளவு குறைக்கப்படாது!: தமிழக அரசின் முடிவால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி..!!

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பரப்பளவை குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியின் போது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவாக குறைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தேசிய வன உயிர் வாரியத்திடம் அதிமுக அரசு விண்ணப்பம் ஒன்றையும் அளித்தது. இதனால் பாதுகாக்கப்பட்ட பகுதியை கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்களுக்கு திறந்துவிடும் ஆபத்து ஏற்பட்டது. தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காக அதிமுக அரசு இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டதாக கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து பரப்பளவு குறைப்பு தொடர்பான தகவல் உண்மையில்லை என்று வனத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

எனினும் சரணாலய பரப்பளவை குறைப்பதற்கான அனுமதி கோரிய விண்ணப்பம் அதிமுக அரசால் திரும்பபெறப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு வனத்துறையின் தலைமை காட்டுயிர் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகுவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை சுருக்கினால் பல்லுயிர் சூழல் பாதிக்கப்பட்டு பறவைகள் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே எல்லையை குறைக்கக்கோரி கடந்த ஆண்டு அனுப்பிய விண்ணப்பத்தை நிரந்தரமாக திரும்பப் பெற்றுக்கொண்டதாக கருத்துமாறு கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: