ஆற்காடு: ஆற்காடு அருகே சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள வரகூர் ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் நேற்று நடந்த துவக்க நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) மணி, சுகாதார மேற்பார்வையாளர் பழனி ஆகியோர், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார குழுவினர் மேற்கொள்ள வேண்டிய டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் குறித்து விளக்கி கூறினர். இப்பணியில் 30 பேர் கொண்ட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து வரகூர் ஊராட்சிக்குட்பட்ட வரகூர், கருங்காலிகுப்பம், வரகூர் புதூர் உட்பட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுப்புழுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.