1971 போர் வெற்றி பொன்விழா கொண்டாட்டம்; சென்னையில் போர் நினைவு சின்னம் 4 நாட்கள் பொதுமக்களுக்காக திறப்பு: செல்பி எடுத்துக்கொள்ள சிறப்பு ஏற்பாடு

சென்னை: பாகிஸ்தானுக்கு எதிராக 1971ல் நடந்த போர் வெற்றியின், பொன் விழாவை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள போர் நினைவு சின்னம் 4 நாட்களுக்கு பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படும் என்று லெப்டினன்ட் ஜெனரல் அருண் தெரிவித்துள்ளார். இந்தியா -பாகிஸ்தான் இடையே 1971ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா பெரும் வெற்றி பெற்றது.  1971 டிசம்பர் 16ம் தேதி ‘‘விஜய் திவாஸ்” இந்தியா -பாகிஸ்தான் போரில் சுமார் 93,000 ஆயுதம் ஏந்திய பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர்.

13 நாட்கள் நடந்த கடுமையான போரின் முடிவில் வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற்று தனி நாடானது. இந்த வரலாற்றின் 50ம் ஆண்டு  பொன்விழா  நாளை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து தீவுத்திடலில் உள்ள தக்க்ஷின் பாரத் தலைமையகத்தில் லெப்டினன்ட் ஜெனரல் அருண் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து குறித்து தமிழ் ஊடகம் மிக சரியான வகையில் செய்தியை மக்களுக்கு உடனுக்குடன் தெரிவித்ததற்கு நன்றி.

இந்திய-பாகிஸ்தான் போரின் பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் இன்று டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.அதேபோன்று இன்று சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நடைபெற இருக்கிறது. அதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைக்கின்றனர். மேலும் இன்று காலை  10 மணி முதல் 19ம் தேதி மாலை 5 மணி வரை போர் நினைவு சின்னமானது, பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்க இருக்கிறோம்.

பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் வந்து உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தலாம். மேலும் செல்பி எடுத்துக் கொள்ள போர் நினைவு சின்னத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெற உள்ள பொன்விழா நிகழ்ச்சியில் இந்திய பாகிஸ்தான் போரில் ஈடுபட்ட வீரர்கள் சிறப்பிக்க படுவார்கள்.இவ்வாறு லெப்டினன்ட் ஜெனரல் அருண் கூறினார்.

Related Stories: