திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய ஆர்டிபிசிஆர் கருவி, கோவிட் நுரையீரல் மறுவாழ்வு மையம், புற்றுநோய் பரிசோதனை மையம், வாட்டர் பெட் சிறப்பு வார்டு திறப்பு விழா இன்று நடந்தது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர். இதைதொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: திமுக அரசு பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டில் 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டும் கையிருப்பு இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த சீரிய நடவடிக்கையால் தற்போது 1,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான அளவில் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது அரசிடம் 25,660 ஆக்சிஜன் சிலிண்டர், 70 பி.எம் கேர் நிதியிலிருந்து கட்டப்பட்ட ஆக்சிஜன் ஆலைகள், 94 தனியார் பங்களிப்போடு கூடிய ஆக்சிஜன் ஆலைகள், அரசு சார்பில் 241 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இந்தளவுக்கு ஆக்சிஜன் ஆலைகள் இல்லை.