உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 7 தமிழர்கள் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை: பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என்று நம்புகிறோம் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நீதிபதி மகாதேவன் மற்றும் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் துரை.ஜெயச்சந்திரன், சித்தரஞ்சன் மோகன்தாஸ் உள்ளிட்டோரும்  பங்கேற்றனர். விழாவில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் சட்டக்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக கல்லூரிகள் கொண்டு வரப்படும். மனித உரிமைகள் பாடத்தை சட்டப் படிப்பில் ஒரு பாடமாக சேர்ப்பதற்கு முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். வட்டாரங்களில் நீதிமன்றம் தேவைப்படும் இடங்களில் உயர் நீதிமன்ற அறிவுத்தல்படி நிறுவப்படும். தமிழை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்ற முத்தமிழறிஞரின் கனவை நிறைவேற்றும் வகையில் அரசு செயல்படும். மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். 7 பேர் விடுதலையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என்று நம்புகிறோம். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

Related Stories: