திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலைய கட்டுப்பாட்டில் இயங்கும் விருந்தினர் மாளிகை, கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் உள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணிகளுக்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சிலர் வேலை செய்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில், பராமரிப்பு பணிகளின் ஒப்பந்தாரர் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தை சேர்ந்த 8 பேரை ஒரே நேரத்தில் நீக்கி விட்டு, புதிய பணியாளர்களை நியமித்துள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் பெருமாள், வழக்கறிஞர் மணிகண்டன், நிஜாமுதீன், காஜா மொய்தீன், பாபு, வார்டு உறுப்பினர் ராஜேஷ் ஆகியோர், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுடன், விருந்தினர் மாளிகைக்கு சென்று, ஒப்பந்ததாரரிடம் பேசினர். ஆனால், அவர் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், விருந்தினர் மாளிகையை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.