சென்னை: தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு குடும்பத்தினருக்கு நூலுரிமை தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-22ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கிணங்க, தமிழறிஞர் புலவர் ராசு மருத்துவச் செலவிற்கு உதவிடும் வகையில் அவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டமைக்கு ரூ.15 லட்சமும் மற்றும் மறைந்த தமிழறிஞர்களான சிலம்பொலி செல்லப்பன், முனைவர் பரமசிவன் மற்றும் புலவர் இளங்குமரனார் ஆகியோரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம், தமிழறிஞர்கள் முருகேச பாகவதர் மற்றும் சங்கரவள்ளி நாயகம் ஆகியோரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சம் நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார். அப்போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.