திருக்கோயில்கள், திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நடத்தும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், மணமக்களின் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும், திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.    

இந்த அறிவிப்பை நிறைவேற்றும் விதமாக, சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி திருமணத்திற்கு  மணமகன் சுரேஷ்குமார் மற்றும் மணமகள் மோனிஷா ஆகியோருக்கு திருக்கோயிலில் திருமணம் செய்திட கட்டணம் இல்லை என்ற உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் வழங்கினார்.

மேலும், மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களுடன் பரிசு பொருட்களையும் வழங்கி வாழ்த்தினார்.  இத்திட்டத்தை தொடங்கி வைத்ததன் மூலம், இனிவரும் காலங்களில் திருமணம் நடத்தவிருக்கும் மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம்  நடைமுறைப்படுத்தப்படும். நிகழ்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: