மணிக்கு 250 கிமீ வேகம்; விலை 145 கோடி: எம்.ஐ 17 வி5 ஹெலிகாப்டர்

இந்திய ராணுவத்தின் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்தது எம்ஐ-17 வி-5 வகை ஹெலிகாப்டர். ரஷ்யாவின் கஸான் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ராணுவ ஹெலிகாப்டர். 2015ம் ஆண்டில் வாங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் ஒன்றின் விலை 145 கோடி ரூபாய். உலகின் மிக நவீனமான ஹெலிகாப்டராக இது கருதப்படுகிறது. ராணுவத் தாக்குதல் நடத்துவது, வீரர்களை ஏற்றிச் செல்வது, எல்லைக் கண்காணிப்பு, தீயணைப்பு, ராணுவத்துக்கு சரக்குகளை எடுத்துச் செல்வது என எல்லாப் பணிகளுக்கும் பயன்படுகிறது.அதிகபட்சமாக 36 பேர் வரை பயணம் செய்யக்கூடிய பெரிய ஹெலிகாப்டர் இது. 4,500 கிலோ வரை பொருட்கள் எடுத்துச் செல்லலாம். மணிக்கு 250 கிமீ வேகத்தில் பயணம் செய்யும் இந்த ஹெலிகாப்டரில், அதிகபட்சமாக 580 கிமீ தூரம் வரை தொடர்ச்சியாக பயணிக்கலாம். சில ஹெலிகாப்டர்களை இரவில் இயக்க முடியாது. ஆனால், இதில் இரவு பகல் என எந்த நேரத்திலும் பயணம் செய்யலாம். குளிர் நிறைந்த உயரமான மலைகள், பாலைவனங்கள் என எந்த தட்பவெப்பத்திலும் இயங்கும். 6 ஆயிரம் மீட்டர் உயர மலைப்பகுதியில்கூட இது பறக்கும்.

இமயமலையின் பனி படர்ந்த சியாச்சின் பிரதேசத்தில் எல்லைக்காவல் புரியும் வீரர்களுக்கு முன்பெல்லாம் ஆயுதங்களையும் உணவுப்பொருட்களையும் எடுத்துச் சென்று தருவது கடினமாக இருந்தது. எம்ஐ-17 வி-5 ஹெலிகாப்டர் வந்தபிறகே அந்தப் பிரச்னை தீர்ந்தது. இப்போது சியாச்சினில் இருக்கும் வீரர்களுக்கு எல்லாவற்றையும் சுமந்து செல்வது இந்த ஹெலிகாப்டர்கள்தான்.இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள், ராக்கெட்கள், மெஷின் கன்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கும். சர்ஜிகல் ஸ்ட்ரைக், தீவிரவாதிகளை வேட்டையாடுதல் போன்ற விஷயங்களுக்கு இது அதிகம் உதவும். அதேபோல, ஏவுகணைத் தாக்குதல்களை சமாளிக்கும் பாதுகாப்பு கவசமும் இதில் இருக்கும். இதை இயக்கும் பைலட்டால் இரவு நேரத்திலும் துல்லியமாகப் பாதையைப் பார்க்க முடியும். மேலும், ஆட்டோ பைலட் சிஸ்டம் பொருத்தப்பட்ட மிகச் சில ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. அதனால், பைலட் இல்லாமலும் இது தானாக இயங்கும்.

கவச வாகனம்போல பாதுகாப்புத் தகடுகள் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் என்பதால், விபத்தில் சிக்கினாலும் உள்ளே இருப்பவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு அதிகம். இதன் எரிபொருள் டேங்கும் விபத்தில் வெடித்து சிதறி எரியாதபடி பாலியூரிதேன் பாதுகாப்பு கொண்டது. தீவிபத்து ஏற்பட்டால் அணைக்கும் கருவிகளும் உள்ளன. என்றாலும், பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறி எரிந்திருக்கிறது. பொதுவாக ரஷ்ய போர்க்கருவிகளையோ, ராணுவ விமானங்களையோ அமெரிக்கா வாங்காது. ஆனால், ஆப்கானிஸ்தான் போரில் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவிலிருந்து 63 எம்ஐ-17 வி-5 ஹெலிகாப்டர்களை வாங்கியது.

இந்திய விமானப்படை விரும்பி வாங்கும் ஹெலிகாப்டராக இதுவே இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் 163 எம்ஐ-17 வி-5 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கியுள்ளது. இந்தியாவில் இவற்றைப் பழுது பார்க்கும் வசதிகளையும் ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது. மிகவும் பாதுகாப்பானது என்பதால், வி.வி.ஐ.பி-க்கள் பயணம் செய்வதற்காக இதில் 10 ஹெலிகாப்டர்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் என்று பலருமே குறுகிய தூரப் பயணங்களுக்கு பயன்படுத்துவது இந்த ரக ஹெலிகாப்டரைத்தான். மிக அரிதாகவே இந்த ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கும். அப்படி ஒரு விபத்தில் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியே சிக்கியது சோகம்.

நவீன இருக்கைகள், குளுகுளு வசதி விவிஐபிகளுக்காக மாற்றப்பட்ட எம்ஐ 17

எம்ஐ 17 வி5 ஹெலிகாப்டரில் விவிஐபிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகளை இந்திய விமானப்படை செய்துள்ளது. உள்ளே சத்தம் கேட்காமல் இருக்க சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, குளுகுளு வசதி, கழிப்பறை, தகவல் தொடர்பு வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் இந்த ரக ஹெலிகாப்டர்களில் செய்யப்பட்டுள்ளது.  விவிஐபிகளுக்காக ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து நவீன இருக்கைகளை வாங்கி விமானப்படை பொருத்தியது.

கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்

ஹெலிகாப்டரில்   இருந்த கருப்பு பெட்டி எரியும் நெருப்பில் விழுந்து விட்டதாக தெரிகிறது.   தீயை அணைத்து கருப்பு பெட்டியை தேடும் பணியில் ராணுவ மீட்பு குழுவினர்   ஈடுபட்டுள்ளனர். கருப்பு பெட்டியில் ஹெலிகாப்டர் எந்த உயரத்தில் எந்த வேகத்தில் பறந்தது என்ற விவரமும் அதில் விமானிகளின் பேச்சுகள் அடங்கிய விவரங்கள் இருக்கலாம் என ராணுவத்துறையினர்   கருதுகின்றனர். இந்த கருப்பு பெட்டிதான் இந்த விபத்தின் முக்கிய ஆதாரமாக   இருக்கும் என கூறப்படுகிறது. கருப்பு பெட்டியை மீட்க உள்ளூர் போலீசார்,   தீயணைப்பு துறையினரும் உதவி செய்து வருகின்றனர். ஹெலிகாப்டர் பற்றி எரிந்து தள்ளாடியபடி பறந்தபோது மலைப்பகுதியில் எங்காவது   கருப்பு பெட்டி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

குன்னூர் செல்ல தடை

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக வாகனங்கள்  செல்ல தடை விதிக்கப்பட்டது. கோத்தகிரி வழியாக வாகனங்கள் திருப்பி  விடப்பட்டன. மீட்பு வாகனங்கள், ராணுவ அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள்  சென்ற வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. நீலகிரி, கோவை இடையே பொது  போக்குவரத்து ஸ்தம்பித்தது. குறிப்பாக, கோத்தகிரி ரோட்டில் வாகனங்கள் நீண்ட  வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சென்றதால் மக்கள் தவிப்படைந்தனர்.

நீலகிரியை அதிர வைத்த விபத்துகள்

நீலகிரி  கொடநாடு ரங்கசாமி பில்லர் பகுதியில் கடந்த 1950ல் விமான  விபத்து  ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். இதற்கு பிறகு கடந்த 1987ல் குன்னூர் அருகே கம்பிசோலை பகுதியில் கிளைடர் விமானம்,  விபத்தில்  சிக்கியது. இதில், 2 ராணுவ அதிகாரிகள் இறந்தனர். அதற்கு பின்னர்,  இந்த  ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்துள்ளது. ‘‘பனிமலை காட்டில் இப்படி ஒரு கோர   விபத்து ஏற்பட்டதில்லை. நாங்கள் இதை நம்ப முடியாமல் தவிக்கிறோம்’’ என   ராணுவத்துறையினர் அதிர்ச்சியுடன் கூறினர்.

பாக். ராணுவ அதிகாரிகள் இரங்கல்

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்திற்கு பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் செய்திதொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாப் இப்திகார் தனது டிவிட்டர் பதிவில், ‘‘பாகிஸ்தான் கூட்டுப்படை தளபதிகளின் தலைவர் நதீம் ராசா, ராணுவ தளபதி ஜெனரல் காமர் ஜாவேத் பஜ்வா ஆகயோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்’’ என கூறி உள்ளார்.

Related Stories: