சென்னை: புலம்பெயர்ந்த தமிழர்களின் நல் வாழ்வுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்த நிலையில், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 12ம் தேதி “புலம் பெயர்ந்த உலக தமிழர் நாளாக” கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஜனவரி 12, 13 ஆகிய 2 நாட்கள் “புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள்” சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயரை பதிவு செய்யும் பொருட்டும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்கள், அவர்களது பிரச்னைகளுக்கான தீர்வுகள் போன்றவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டும் “மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர் நல ஆணையரகத்தின்” இணையதளத்தை (https://nrtamils.tn.gov.in) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். அப்போது, ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன் உடனிருந்தனர்.