சென்னை: ஹஜ் புனித யாத்திரை குறித்து தமிழக பாஜவினர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ஹஜ் அறிவிக்கையில், ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள குறிப்பிட்டுள்ள விமான நிலையங்களின் பெயர் பட்டியலில் சென்னை விமான நிலையத்தின் பெயர் இடம்பெறவில்லை.
எனவே ஹஜ் புனித யாத்திரை குச் செல்ல சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ளும் நடைமுறை தொடர வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நவ.11ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதே கருத்தைத் தான் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இதையெல்லாம் பற்றி தெரியாத தமிழக பாஜவினர், வழக்கம் போல் பொய்யான தகவல்களையே பரப்பி வருகின்றனர். தயவு செய்து உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.