மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் திட்ட அறிக்கையை துல்லியமாக அளிக்க வேண்டும்: ஆலோசனை குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: மழைவெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் துல்லியமான திட்ட அறிக்கையை விரைவாக அளிக்க வேண்டும் என சென்னை பெருநகர வெள்ளப் பெருக்கை தணித்தல் மற்றும் நிர்வகித்தல் குழு ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை பெருநகர வெள்ளப் பெருக்கை தணித்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆலோசனைக் குழு தலைவர் வெ.திருப்புகழ், நீர்வள ஆதாரத் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் குமார் ஜெயந்த், நிதித் துறை செயலாளர் நா.முருகானந்தம், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் ஹிதேஷ் குமார் மக்வானா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அரசு துறைச் செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாம் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா தொற்று மிரட்டிக் கொண்டு இருந்தது. அதனைக் கொஞ்சம் அடக்கி, கட்டுப்படுத்தியிருக்கிறோம். இப்போது ஒமிக்ரான் என்ற தொற்று மிரட்டத் தொடங்கி இருக்கிறது. இதற்கு மத்தியில் மழை, வெள்ளம். இப்படி தொடர்ச்சியாக பேரிடர்கள் வந்தாலும் அவை அனைத்தையும் வெல்லக்கூடிய, திறம்படைத்ததாக, தமிழ்நாட்டின் அரசு நிர்வாகம் இருக்கிறது என்பதைத்தான் பெருமையுடன் இந்தக் கூட்டத்தில் சொல்ல விரும்புகிறேன். அமைச்சர்கள் முதல் அனைவரும் களத்தில் நின்ற காரணத்தால்தான் வரலாறு காணாத மழை பெய்தாலும் பாதிப்பு என்பது மிகமிகக் குறைவாக ஏற்பட்டிருக்கிறது. முன்பு ஏற்பட்ட இறப்பு, பாதிப்புகளோடு ஒப்பிடும்போது இப்போதைய பாதிப்பு மிகமிகக் குறைவுதான்.

நான் உழைத்தேன்- காலை, மாலை என்று இரவு பகல் பாராமல், மழையில் நனைந்தபடியே நடந்து மக்களைச் சந்தித்தேன் என்று ஊடகங்கள் இன்றைக்கு நம்மைப் பாராட்டிக் கொண்டிருக்கிறது. பொதுமக்களும் பாராட்டுகிறார்கள். இந்த பாராட்டுகள் எல்லாம், தனிப்பட்ட என்னைப் பாராட்டுவதாக நினைக்கவில்லை. தமிழ்நாடு அரசே மழையில் நனைந்து மக்களைக் காப்பாற்றியிருக்கிறது என்ற அடிப்படையில்தான் இந்த பாராட்டுகளைப் பார்க்கிறேன். முன்களப் பணியாளர்களோடு நானும் ஒரு பணியாளராகவே களத்தில் நிற்கிறேன், நிற்பேன் என்ற உறுதியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மழைக்கால, அதிக வெள்ளக் காலப் பேரிடர்கள் நம் கண் முன்னே ஏற்படுத்தி உள்ள பாதிப்புகள் இன்னொரு முறை வராமல் தடுத்தாக வேண்டும். அதற்கு நிரந்தரமான தீர்வுகாண வேண்டும். அதற்காகத்தான் திருப்புகழ் தலைமையில் இந்தக் குழுவை அமைத்திருக்கிறோம்.

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் எத்தகைய பெருமழையையும் சீரிய வகையில் எதிர்கொள்ளும் வகையில் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டிய விரிவான திட்டங்களை நீங்கள் பகுதி வாரியாகவும், துறை வாரியாகவும் உடனடியாக அரசுக்கு வழங்கிட வேண்டும்.  சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்பட சென்னை வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நீண்ட காலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகளை வழங்க வேண்டும். வெள்ளத் தடுப்பு மட்டுமல்லாமல், நீர் மேலாண்மைக்கான சிறந்த செயல் திட்டம் குறித்தும் நீங்கள் திட்டம் தீட்டி வழங்க வேண்டும். நேற்றையதினம் நான் தூத்துக்குடிக்குச் சென்றிருந்தபோது, நான் நேரடியாகப் பார்த்த அனுபவத்தை சொல்லியாக வேண்டும். அதிகாரிகளுக்கு தெரிந்திருப்பதைவிட, அந்தப் பகுதியிலே இருக்கக்கூடிய பொது மக்களுக்கு அதிகம் தெரிந்திருக்கிறது. நேற்றையதினம் சுமார் 65 வயதுடைய தாய்மார் ஒருவர் என்னைப் பார்த்து, எங்கிருந்து வெள்ள நீர் வருகிறது, எப்படி வருகிறது, எங்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதைத் தெளிவாகச் சொன்னார். எப்படி தென் சென்னை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி என்று ஒரு திட்டத்தை உருவாக்கி, அதன்மூலமாக ஏற்பட்ட விளைவின் காரணமாகத்தான் தி.நகர் பகுதியில் தண்ணீர் 5, 6 நாட்கள் தொடர்ந்து தேங்கியிருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது.  அதேபோல்தான் தூத்துக்குடியிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஏற்பட்டிருக்கிறது. எந்தெந்த கால்வாயிலிருந்து தண்ணீர் வருகிறது என்று அங்குள்ள தாய்மார்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். எனவே, நம்முடைய அதிகாரிகளும் அதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் தங்களுடைய கருத்துகளை, உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.

சென்னையில் அதிக மழை பெய்தால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது என்றால் அனைத்துப் பகுதியிலும் ஒரே மாதிரியான மழை நீர் வடிகால் அமைப்பு முறை இல்லை. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியான திட்டமிடுதல்கள் தேவைப்படுகிறது. எனவே பகுதி வாரியாக குறிப்பான ஆலோசனைகள்,  திட்டமிடுதல்கள் தேவை. இவை அனைத்தையும் உடனடியாகவும் செய்தாக வேண்டும். எனவே திட்டங்கள் தீட்டுவதற்கே பல மாதங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அன்புடன் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிக்கையை நீங்கள் கொடுத்தாக வேண்டும். எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக திட்டங்களை நடைமுறைப்படுத்திக் காட்டுவோம்.  ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. எனவே, மக்கள் தங்களுக்குள் ஓரளவு சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து வரும் காலங்களில் நம்மிடம் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். நாம் போகும் இடங்களில் அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் வந்து ஐந்து, ஆறு மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. நிச்சயமாக அடுத்த வருடம் இதுபோன்று மழை வருவதற்கு முன்னதாக, இதையெல்லாம் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று பொது மக்கள் இன்றைக்குப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளை, அடுத்த முறை நடக்காமல் தமிழ்நாடு தடுத்து விட்டது என்ற பெயரை நாம் எடுத்தாக வேண்டும். எனவே, திட்ட அறிக்கையைத் தாருங்கள். அதை விரைவாகத் தாருங்கள் - துல்லியமாகத் தாருங்கள் - நடைமுறைச் சாத்தியம் உள்ள திட்டங்களாக தாருங்கள். திருப்புகழ் உள்பட அனைவரின் திறமை மீதும் தமிழக அரசுக்கும், ஏன், எனக்கும் மிகுந்த மரியாதை இருக்கிறது. உங்களுக்குள் இருக்கும் அனைத்துத் திறமைகளையும் தமிழகத்தின் மக்களைக் காக்கும் திட்டத்தை தீட்டுவதற்கு பயன்படுத்துங்கள் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

Related Stories: