திருத்தணி: திருவாலங்காடு அடுத்த ராமாபுரம் கிராமத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 162 ஹெக்டேர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த தண்ணீர் மூலம் சுமார் 50 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஏரி நிரம்பி கடல்போல் ததும்பியது. இதனால் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் சந்தோஷம் அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ஏரியின் கடவாசல் பகுதியில் அரிப்பு ஏற்பட்டதால் சுமார் 100 அடி அகலத்துக்கு உடைப்பு ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் வெளியேறி கொசஸ்தலை ஆற்றில் கலந்துவிட்டது. ஆற்றின் கரையோர பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த பகுதியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டிருப்பதால் அவற்றை அடைக்க முடியவில்லை.
தகவலறிந்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா கோட்ட பொறியாளர் கார்த்திகேயன் திருத்தணி வட்டாட்சியர் ஜெபராணி கனகம்மாசத்திரம் வருவாய் ஆய்வாளர் சீனத்சாபிரா காஞ்ச்சிப்பாடி சரவணன் யுவராஜ் கிராம நிர்வாக அலுவலர் ராமன் ராமாபுரம் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்குவந்து உடைப்பு பகுதியை பார்வையிட்டனர். மேலும் ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டிருப்பதால் உடைப்பை சரிசெய்ய முடியவில்லை. கனரக வாகனங்களுடன் சீரமைக்க உத்தரவிட்டார்.