தக்காளி ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்த கோயம்பேடு மார்க்கெட்டில் 1 ஏக்கர் இடம் ஒதுக்க வேண்டும்: மார்க்கெட் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு குறையாத இடத்தை ஒதுக்க வேண்டுமென கோயம்பேடு மார்க்கெட் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறக்க கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகனங்களை நிறுத்தக்கூடிய இடத்தில் சிறுகடைகளின் உரிமையாளர்கள் விற்பனை செய்ததால் மைதானம் மூடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தக்காளி விலை உயர்வை கருத்தில் கொண்டு தற்காலிகமாக வாகனங்களை நிறுத்த அனுமதிக்க முடியுமா என சி.எம்.டி.ஏ. மற்றும் கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி ஆகியவற்றிற்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்க்கெட் கமிட்டி தரப்பில், 800 வாகனங்களை 8 இடங்களில் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் உள்ளது. இந்த சங்கத்தினரை அனுமதிக்காததால்தான் விலை உயர்ந்தது என கூறுவது தவறு. அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் எவரும் தடுக்கப்படவில்லை. கடந்த வாரத்தை விட தக்காளி விலை தற்போது குறைந்துள்ளது. தக்காளி விற்பனை இடத்திற்கு அருகில் உள்ள ஏ சாலை எஃப் பிளாக் அருகில் உள்ள இடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு, காலி மைதானத்தில் தக்காளியை லாரியிலிருந்து சிறு வாகனங்களுக்கு மாற்ற மட்டுமே பயன்படுத்துவோம். விற்பனை செய்ய மாட்டோம்  என்று வியாபாரிகள் சங்கம் தரப்பில் ஆஜரான வக்கீல் சிவா தெரிவித்தார். இவற்றை பதிவு செய்த நீதிபதி, கடந்த சில வாரங்களாக பெய்து வரும் இடைவிடாத மழையினால், தக்காளியின் விலை அதி பயங்கரமாக உயர்ந்துள்ளது. எனவே, தக்காளி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், விலையும் குறையத் தொடங்கி விடும். தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், தற்காலிக ஒரு ஏக்கருக்கும் குறையாத இடத்தை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வியாபாரிகளும் பொருட்களை ஏற்றி இறக்க மட்டும் நான்கு வாரங்களுக்கு இடைக்காலமாக  மார்க்கெட் கமிட்டி ஒதுக்க வேண்டும். நாளை முதல் (இன்று) அந்த இடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

அந்த இடத்தில் தக்காளி இறக்கப்படுகிறதா அல்லது மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் நடக்கிறதா என்பதை மார்க்கெட் கமிட்டி கண்காணிக்க வேண்டும். வியாபாரம் நடத்த அனுமதிக்க கூடாது. தக்காளி கொண்டுவரும் வாகனங்களை இறக்குவதற்கும் காலி டப்பாக்களுடன் அந்த வாகனம் செல்வதற்கும் உரிய நேரத்தை மார்க்கெட் கமிட்டி நிர்ணயிக்க வேண்டும். சோதனை முறையில் தற்காலிகமாக  இந்த நடைமுறையை கடைபிடிக்கப்பட வேண்டும். அதன்பிறகு அதற்கான உரிமையை கோர முடியாது. இந்த தற்காலிக நடைமுறை இன்று அதிகாலை 4 மணி முதல் 4 வாரங்களுக்கு கடைபிடிக்கப்பட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: