தமிழகம் முழுவதும் நடைபெற்ற 12ம் கட்ட மெகா முகாமில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

சென்னை:  தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 12வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் என மொத்தம் 50,000 இடங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் செயல்பட்டது.

தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் இரவு  வரை நடைபெற்ற முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். குறிப்பிட்ட காலஅவகாசம் முடிந்தும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளித்து முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் நேற்று அடையாறில் 12வது மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் துவங்கி வைத்தனர்.

அதன்படி நேற்று நடைபெற்ற 12ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 16,05,293  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணையாக 5,89,140 பேருக்கும், இரண்டாவது தவணையாக 10,16,153 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதைப்போன்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும்  1600 முகாம்களுடன் 12 வது கோவிட் மெகா  தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

Related Stories: