சென்னையில் 464 இடங்களில் மழைநீர் தேக்கம் 820 மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றம்: 20 சுரங்க பாதைகளில் போக்குவரத்துக்கு அனுமதி

சென்னை: சென்னையில் 464 இடங்களில் தேங்கிய மழைநீரை 820 மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர். 20 சுரங்கப்பாதைகளில் நீர் அகற்றப்பட்டு போக்குவரத்துக்காக அனுமதிக்கப்பட்டது. சென்னை மாநகரில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. தி.நகர், கே.கே.நகர், மாம்பலம், மேற்கு மாம்பலம், கோயம்பேடு, வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, புளியந்தோப்பு, எழும்பூர், வேளச்சேரி, மேடவாக்கம், வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலை கமி‌ஷனர் அலுவலகம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி உள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை நீர் வடிந்த இடங்களில் எல்லாம் தற்போது மீண்டும் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதில் தாழ்வான இடங்களில் உள்ள 500  தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். தி.நகர், கே.கே.நகர், மேற்கு மாம்பலம், வேளச்சேரி, கிண்டி சர்தார்வல்லபாய் படேல் சாலை போன்ற 464 தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை 820 மின் மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. மழை இடைவிடாமல் பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மழை விட்டு விட்டு பெய்த நிலையில் நேற்று காலையில் இருந்து மழை பெய்யவில்லை.  இதனால் பல்வேறு தெருக்கள், சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்பட்ட நிலையில் நேற்று பெரும்பாலான சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றியதையடுத்து போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்பட்டது. 22 சுரங்பாதைளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் கடந்த மூன்று நாட்கள் பெய்த மழையில் மாநகராட்சி  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து 20 சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீர் உடனுக்குடன் அகற்றப்பட்டதால் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

Related Stories: