கும்பகோணத்தில் வீடியோ வைரல் நோயாளிக்கு வாங்கி சென்ற பார்சல் இட்லியில் தவளை

கும்பகோணம்: நோயாளிக்கு வாங்கி சென்ற பார்சல் இட்லியில் தவளை கிடந்ததால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மாடாகுடியை சேர்ந்த முருகேசன் என்பவர் இதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பார்ப்பதற்காக உறவினர் ஒருவர், நேற்றுமுன்தினம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து இட்லி பார்சல் வாங்கி சென்றார். அந்த இட்லி பார்சலை முருகேசன் பிரித்து சாப்பிட முயன்றபோது, ஒரு இட்லிக்குள் தவளை இறந்து கிடந்தது கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்த உறவினர்கள், தவளை கிடந்த பார்சலை எடுத்துக்கொண்டு அந்த ஓட்டலுக்கு சென்றனர். ஓட்டல் உரிமையாளரிடம் இட்லியை காட்டி புகார் செய்தனர். இதையடுத்து ஓட்டல் உரிமையாளர், இட்லிக்கு உரிய பணத்தை திருப்பி கொடுத்ததோடு இட்லி ஊற்ற வைத்திருந்த மாவையும் அவர்கள் கண்முன்பே கீழே கொட்டினார். பின்னர் ஓட்டலை பூட்டிவிட்டு உரிமையாளர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: