சென்னை: சென்னை சூளை, சாலை தெருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (44), இவர், தலைமை செயலகத்தில் செய்தித்துறையில் பணியாற்றி வந்தார். தொடர் மழையால் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்நிலையில் நேற்று காலை 10.20 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்றுள்ளார். வீட்டின் வளாகத்திற்குள் மழைநீர் தேங்கி இருந்ததால் வழுக்கி கீழே விழுந்துள்ளார். அப்போது சுற்றுச்சுவரின் இரும்பு கேட்டை பிடித்துள்ளார். மழையால் இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இது தெரியாமல் அவர் கேட்டை பிடித்ததும் மின்சாரம் பாய்ந்து சுயநினைவு இழந்தார். இதை பார்த்த அவரது வீட்டில் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மின் இணைப்பை துண்டித்து முரளி கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.தகவல் அறிந்து, வேப்பேரி போலீசார் முரளி கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சூளையில் பரபரப்பு ஏற்பட்டது.