டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி தலைமையில் தற்போது ஆலோசனை நடைபெறுகிறது. கோவிட்-19 நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் விகே பால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் வீரியமிக்க கொரோனா பரவி வரும் நிலையில் அரசு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். புதிய கொரோனாவான ‘ஒமிக்ரான்’ பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் மற்றும் இந்த நாடுகளின் வழியாக வருபவர்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புகளின் தற்போதைய நிலைமை மற்றும் தடுப்பூசிகளை தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் கூறியுள்ளார்.