கோவையில் விரைவு ரயில் மோதி 3 யானைகள் பலி

கோவை: கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 2 குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 9 மணியளவில் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது,கோவை மதுக்கரை வனச்சரகம் க.க.சாவடி காவல் நிலைய சரகம் மகேந்திர மேடு, நவக்கரை அருகே உள்ள தங்கவேல் காட்டு மூளை பகுதியை ரயில் கடக்கையில், வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி ரயில் பாதையை கடக்க முயன்ற சுமார் 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதன் இரண்டு குட்டி யானைகள் மீது ரயில் மோதியது.

இதில், தாய் மற்றும் தாய் யானையுடன் வந்த 2 குட்டி உட்பட மூன்று யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். யானை உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமான முறைப்படி இன்று காலை யானையின் உடல் அதே பகுதியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: