தாம்பரம்: தாம்பரம் ரயில்வே பணிமனையில் அந்தியோதயா விரைவு ரயில் தடம்புரண்டதில் ஊழியர் படுகாயமடைந்தார். தாம்பரம் பகுதியில் 3வது ரயில் முனையம் உள்ளது. இங்குள்ள பணிமனையில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பல்வேறு விரைவு ரயில்கள் பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு அந்தியோதயா விரைவு ரயில் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், நேற்று மதியம் பராமரிப்பு பணிக்காக பிட் லைன் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, இன்ஜின் பிரேக் பிடிக்காமல் போனதால், ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று வேகமாக மோதி தடம் புரண்டது.