பதான்கோட்: பஞ்சாப் மாநிலத்தில் செயல்படும் ராணுவ முகாமின் குறிப்பிட்ட வாயிலில் மர்ம நபர்கள் கையெறி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் என்ற இடத்தில் ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமுக்கு அருகே விமானப்படை நிலையங்கள், ராணுவ வெடிமருந்து கிடங்குகள், இரண்டு கவச படைப்பிரிவுகள் ஆகியன உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு ஜனவரியில் பதான்கோட் விமானப்படை நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுமார் 8 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று அதிகாலை முகாமின் திரிவேணி கேட் வழியாக பைக்கில் சென்ற மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.