சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றில் 1 லட்சம் கட்டிடங்கள், 1.70 லட்சம் ஏக்கர் நிலங்கள் வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டிடங்கள், நிலங்களின் வாடகை, மற்றும் குத்தகைதாரர்கள் சிலர் முறையாக வாடகை செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இதில், பலர் லட்சக்கணக்கில் வாடகை பாக்கி நிலுவையில் வைத்துள்ளதாக தெரிகிறது. தற்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சேகர்பாபு, கோயில்களின் வாடகை பாக்கியை வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும், பாக்கி தராமல் இழுத்தடிக்கும் நபர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அகற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.