விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள்!: உங்களின் அளவு கடந்த அன்பால் பூரித்து போயிருக்கிறேன்...நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி உருக்கம்..!!

கொல்கத்தா: தனிப்பட்ட முறையில் உங்களிடம் விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள் என்று ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தெரிவித்துள்ளார். மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, இன்று காலை காரில் சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவு உபச்சார விழாவையும் அவர் புறக்கணித்து பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற சக நீதிபதிகளுக்கு சஞ்சீவ் பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், எனது நடவடிக்கைகள் புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது அல்ல; ஐகோர்ட் நலனுக்கானது மட்டுமே என்று தெரிவித்திருக்கிறார்.

என் மீதான உங்களின் அளவு கடந்த அன்பினால் பூரித்து போயிருக்கிறேன் என்று மகிழ்ச்சி தெரிவித்த சஞ்சீவ் பானர்ஜி, நாட்டில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த பதிவுத்துறைக்கும் நன்றி தெரிவித்து கொண்ட தலைமை நீதிபதி, வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு என்ற அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன் பட்டிருக்கிறேன். எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே விடைபெறுகிறேன். ஆதிக்க கலாச்சாரத்தை என்னால் முழுமையாக தகர்த்தெறிய முடியவில்லை என்றும் சஞ்சீவ் பானர்ஜி தனது கடிதத்தில் உருக்குமாக குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: