பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு; இழப்புகளை ஒன்றிய அரசே ஏற்கும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பால் ஏற்படும் இழப்புகளை ஒன்றிய அரசே ஏற்கும் என்றும், அனைத்து மாநிலங்களுக்கும் வருகின்ற 22ம் தேதிக்குள் 95 ஆயிரம் கோடி ரூபாய் வரித்தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று மாநில முதல்வர்கள், மாநில நிதியமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 15 மாநில முதல்வர்கள், நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ‘பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பால் ஏற்படும் இழப்புகளை ஒன்றிய அரசே ஏற்கும். மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதி குறைக்கப்படாது. இந்த மாதத்திற்கான பரிந்தளிக்கப்பட வேண்டிய 47 ஆயிரத்து 541 கோடி ரூபாயை, வரித்தொகையுடன் சேர்த்து மேலும் 47 ஆயிரத்து 541 கோடி ரூபாய் என மொத்தம் 95 ஆயிரத்து 82 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும். ஒன்றிய அரசு எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்த பின்னரும் கூட, சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை இன்னும் குறைக்கவில்லை. மதிப்புக் கூட்டு வரியை (வாட்) குறைப்பது மாநிலங்களின் பொறுப்பாகும்.

மாநிலங்களின் மூலதனச் செலவை அதிகரிக்கவும், உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்தவும் வரும் 22ம் தேதிக்குள் ரூ. 95 ஆயிரம் கோடி வரித்தொகை பகிர்ந்தளிக்கப்படும். ஒன்றிய அரசின் வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று நடப்பு நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் தொகை முழுவதும் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நீண்டகால கடன்களை மானியமாக வழங்க மாநிலங்கள் கோரின.

இத்திட்டத்தின்படி மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட கடன் பயனளித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த ஒன்றிய நிதி அமைச்சகத்திற்கு மாநில அரசுகளின் சார்பில் தனித்தனி ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக அனுப்ப வேண்டும். இன்றைய கூட்டத்தில் உற்பத்தித் துறையை விரைவுபடுத்துதல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் முதலீட்டு வளர்ச்சி குறித்து விவாதங்கள் நடைபெற்றன’ என்று கூறினர்.

Related Stories: