சென்னை: சாலிகிராமத்தை சேர்ந்த இந்து (33), (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சாலிகிராமம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (25), ஊர்காவல் படையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அஜித்குமாருடன் நட்பு ஏற்பட்டது. அவருடன் நட்பாக பழகி வந்தேன். இந்நிலையில், அவருக்கு சில பெண்களுடன் தவறான தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரது தொடர்பை நான் சில மாதங்களுக்கு முன்பு துண்டித்துவிட்டேன். ஆனால் அவர், எனக்கு செல்போனிலும், நேரிலும் வந்து, தன்னுடன் பழகுமாறு தொந்தரவு செய்து வந்தார். கடந்த வாரம் தன்னுடன் நெருக்கமாக பழக கோரி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நான் அஜித்குமார் மீது, போலீசில் புகார் அளித்தேன். இதனால் ஆத்திரமடைந்த அவர், எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, என் மீதே புகார் அளிக்கிறாயா என்று கேட்டு சரமாரியாக தாக்கினார். மேலும், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் உடைத்து சேதப்படுத்திவிட்டார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி விசாரணை நடத்த விருகம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி ஊர்காவல் படை வீரர் அஜித்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.