சென்னை: பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு சமச்சீரான இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சாலையில் சென்ற போது மரம் விழுந்து இருவேறு விபத்துகளில் பலியான முதியவர் மற்றும் சிறுவனின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் விசாரித்தார். அச்சமயம், பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, ஒரு சில நிகழ்வுகளில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படுகிறது எனவும் சில நிகழ்வுகளில் 1 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.