பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்: வேளாண்மைத்துறை அறிவிப்பு

சென்னை: விவசாயிகள் நடப்பு 2021-2022ம் ஆண்டில் சம்பா நெற்பயிரை பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இன்றே காப்பீடு செய்ய வேண்டும். நவம்பவர் 15ம் தேதிதான் கடைசி நாள் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021-2022ம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 20.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு சுமார் 10 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இந்தநிலையில்  சம்பா நெற்பயிருக்கான காப்பீடு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாருர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 15 அன்று முடிவடைகிறது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று(15ம் தேதி) பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் முழுவீச்சில் இயங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் நவம்பர் 15ம் தேதி பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி இத்திட்டத்தில் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: