ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் மோதிய விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதில் 4 மீனவர்கள் உயிர் தப்பினர். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருந்த நிலையில் மீன் பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் ஒரு வாரத்திற்கு பின் நேற்று காலை பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். ராமேஸ்வரம் அருகே மண்டபம் மீனவர் அம்ஜத்தின் விசைப்படகு, மண்டபம் தெற்கு மீன்பிடி துறையிலிருந்து வடக்கு கடல் பகுதிக்கு செல்வதற்காக நேற்று பாம்பன் கடல் பகுதிக்கு வந்தது.