தூத்துக்குடியில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடியில் ராவ்பகதூர் குரூர் பர்னாந்துக்கு மணி மண்டபம்  அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:  தூத்துக்குடி மாநகர மக்களின் நலன் காத்திட தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து ஆவார். ஏறத்தாழ 30 ஆண்டு காலம் நகரமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை நகரமன்றத் தலைவராகவும் இருந்த காலத்தில், சாதி, மத பேதமின்றி அம்மாவட்ட அடித்தள மக்களின் அடிப்படைக் கல்வி மேம்பாடு, குடிசை வீடுகள் மேம்பாடு, தீண்டாமை எதிர்ப்பு, கூட்டுறவு வங்கிக் கடனுதவி, சுகாதார மையங்கள், சனிக்கிழமைச் சந்தை, அங்காடிகள், பொதுவான கல்லறைத் தோட்டம் என நல்லபல திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை படைத்தவர்.

தன்னலமற்ற தனது தியாகத்தினால், அம்மாவட்ட மக்களின் மனங்களில் இன்றும் உயர்ந்து நிற்கும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து  நினைவினைப் போற்றிடும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 15 அன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கிணங்க, குரூஸ் பர்னாந்துக்கு பெருமைச் சேர்க்கின்ற வகையில் தூத்துக்குடி மாநகரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: