நெருங்கிய நண்பர்கள் இல்லாததால் காங்கிரஸ் எம்எல்ஏ மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: மத்திய பிரதேசத்தில் பயங்கரம்

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் தனக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லாததால் காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் காங்கிரஸ் எம்எல்ஏ சஞ்சய் யாதவின் மகன் விபாவ் யாதவ் (17). இவர், தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்து 4 பக்க தற்கொலை குறிப்பு கடிதத்தை கைப்பற்றினர். விபாவ் யாதவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் எஸ்பி ரோஹித் கஸ்வானி கூறுகையில், ‘துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விபாவ் யாதவ், 12ம் வகுப்பு படித்து வந்தார். அவர் பயன்படுத்திய துப்பாக்கி, அவரது தந்தையால் உரிமம் பெற்றது. சம்பவம் நடந்த போது, வேலைக்காரர் வீட்டில் இருந்துள்ளார். அவரது தாயார்  சீமா, அவரது உறவினர்களை சந்திப்பதற்காக போபாலுக்கு சென்றிருந்தார். அவரது  தந்தையான எம்எல்ஏ சஞ்சய் யாதவும் வெளியூர் சென்றிருந்தார். மூத்த மகன்  சமர்த் யாதவ், பெட்ரோல் பங்குக்கு சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த விபாய் யாதவ், உளவியல் ரீதியான மன உளைச்சலால் பீரோவில் இருந்த துப்பாக்கியை  எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட தற்கொலைக் குறிப்பு கடிதத்தில், ‘என்னுடைய பெற்றோர்கள் மிகவும் நல்லவர்கள். என் நண்பர்கள் அனைவரும் மிகவும் நன்றாக இருக்கிறார்கள். ஆனால், எனக்கு நெருங்கிய நண்பர்கள் எவரும் இல்லை. அதனால் மேலுலகம் சென்று மிகவும் நல்ல நண்பர்களுடன் வாழவிரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து வழக்குபதிந்து விசாரித்து வருகிறோம்’ என்றார். இத்தகவலை கேள்விபட்ட காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி விவேக் தன்கா, பாஜக எம்எல்ஏ சுஷில் திவாரி, காங்கிரஸ் எம்எல்ஏ தருண் பனோத் ஆகியோர் எம்எல்ஏ சஞ்சய் யாதவின் வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறினர். எம்எல்ஏவின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்தியபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: