சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மழைநீர் தேங்கியுள்ளதன் காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் மழை தொடர்வதால் மேலும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்க இருக்கிறது. அதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழையானது பெய்து வருகிறது. பல்வேறு சாலைகளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.