பவானி: காவிரியில் வெள்ளப்பெருக்கால் நெரிஞ்சிப்பேட்டையில் பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளதால் காவிரி ஆற்றில் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர பகுதி மக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம். தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ள அபாயம் நிலவுவதால் பவானி அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.