கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ நேரில் ஆய்வு

செங்கல்பட்டு: வடகிழக்கு பருவமழை துவங்கி, கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் தொடர் கனமழையால் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில்  மழைநீர் புகுந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், கொளவாய் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளான,  மஹாலஷ்மி நகர், வைபவ் நகர், திம்மாவரம் ஆகிய  பகுதிக்கு சென்று கொட்டும் மழையில்  பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் வராமல் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தார்.

மேலும், மேலமையூர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றி, கொளவாய் ஏரிக்கு எளிதில் செல்வதற்கான பணியை நேரில் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, செங்கல்பட்டு நகராட்சி வரதராஜனார் சாலை, 1வது வார்டு கால்வாய், அனுமந்த பொத்தேரி கால்வாய், குண்டூர் ஏரி என பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நேரில் சென்று பார்வையிட்டதோடு, அந்தந்த பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த ஆய்வில் செங்கல்பட்டு நகர செயலாளர் நரேந்திரன்,  ஒன்றிய கவுன்சிலர் அருள்தேவி, ஆப்பூர் சந்தானம், மாவட்ட பிரதிநிதி ராஜி, திருவள்ளுவன், சந்தோஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: