நிலக்கோட்டை அருகே விபத்து பைக் மீது கார் மோதி இருவர் பலி: 30 அடி உயரம் பறந்து மின்கம்பியில் தொங்கிய சடலம்

வத்தலக்குண்டு: நிலக்கோட்டை அருகே  பைக் மீது கார் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். கார் மோதிய வேகத்தில் பைக்கில் வந்த வாலிபர் 30 அடி உயரம் பறந்து மின்கம்பியில் விழுந்து தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை அருகே பெருங்குடியை சேர்ந்தவர்கள் காமராஜ் (27), அஜித்கண்ணன் (25). தீபாவளியை முன்னிட்டு இருவரும் பைக்கில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று ஊருக்கு புறப்பட்டனர். நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி அடுத்த சிவன்கோவில்மேடு பகுதியில் நேற்று மதியம் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சிவகங்கையில் இருந்து பண்ணைக்காடு நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. கார் மோதிய வேகத்தில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த காமராஜ் 30 அடி உயரம் தூக்கி வீசப்பட்டு மின்வயரில் தொங்கினார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பைக்கை ஓட்டிச் சென்ற அஜித்கண்ணன் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதில் கார் டிரைவர் லேசான காயமடைந்தார். நிலக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் மின்வயரில் தொங்கிய காமராஜின் சடலத்தை மீட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: