ரசிகரின் புற்றுநோய் சிகிச்சைக்கு சிரஞ்சீவி ₹2 லட்சம் உதவி

சென்னை: அரசியலை விட்டு ஒதுங்கிய தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி, தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தெலுங்கில் ஆச்சார்யா, காட்பாதர், போலா சங்கர் ஆகிய படங்களில் நடிக்கும் அவர், சமீபத்தில் தனது கையில் திடீரென்று ஏற்பட்ட உணர்வின்மை காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஐதராபாத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தை சேர்ந்த சிரஞ்சீவியின் தீவிர ரசிகர் வெங்கட், வீட்டில் தங்கியிருந்த சிரஞ்சீவியை சந்தித்தபோது, தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது குறித்து தெரிவித்தார். அவரது வறுமை நிலையை அறிந்த சிரஞ்சீவி, உடனே அவரிடம் ₹2 லட்சம் வழங்கினார். மேற்கொண்டு சிகிச்சை பெற செலவாகும் தொகையை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்த சிரஞ்சீவி, வெங்கட்டின் உடல்நிலை குறித்து தொடர்ந்து தனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தனது அலுவலக நிர்வாகிகளிடம் கூறினார்.

Related Stories: