சென்னை: உலக சிக்கன நாளை முன்னிட்டு அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் பொதுமக்கள் முதலீடு செய்து பயன்பெற வேண்டும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். உலக சிக்கன நாளை முன்னிட்டு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: உலக சிக்கன நாள் அக்டோபர் 30 தமிழகமெங்கும் கொண்டாடப்படுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைவதுடன் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் 1985ம் ஆண்டு முதல் அக்டோபர் 30ம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து, சிக்கனமாக வாழ்ந்து, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது.‘ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை’ என வரவுக்குள் செலவு செய்து, சிக்கனமாக வாழ வேண்டும் என்பதுடன் மனித வாழ்க்கையில் சேமிப்பின் முக்கியத்துவத்தையும் திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.