டாக்டர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை அரசாணையை அமல்படுத்த வேண்டும்: தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழக அரசு அறிவித்த டாக்டர்களுக்கான சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் அரசாணையை உடனே அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் டாக்டர் ரவிசங்கர் கூறினார்.

தமிழக அரசு அறிவித்த டாக்டர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் அரசாணையை உடனடியாக அமல்படுத்தக்கோரி நேற்று சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழ்நாடு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் டாக்டர் ரவிசங்கர் கூறியதாவது: தமிழக முதல்வர் பதவி ஏற்றவுடன் கொரோனா காலக்கட்டத்தில் நன்றாக பணிபுரிந்த டாக்டர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு படிப்பு படித்து, சிறப்பான பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு தகுதிக்கு ஏற்ப சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை 293-ஐ வெளியிட்டார். ஆனால், அந்த அரசாணை இன்றளவிலும், அமல்படுத்தப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு எங்களின் கோரிக்கையை பலமுறையை முன்வைத்தோம்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக அரசு இந்த ஆணையை அமல்படுத்த வேண்டும். அதேபோன்று கொரோனா ஊக்கத்தொகை அறிவித்தும் 4 மாதங்கள் ஆகிறது. அதுவும் இன்று வரை வழங்கவில்லை. எனவே கொரோனாவில் பணிபுரிந்த அனைவருக்கும் ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஏற்கனவே பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு சேவை டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதுவும் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: