முதுநிலை மருத்துவ படிப்பு சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையின்போது அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.டி, எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையின்போது தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய கூடிய அரசு மருத்துவர்கள் 50 சதவீத இடஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. இதை எதிர்த்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயின்று வரும் அரசு சாரா சேவை மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த 11 மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.அவர்கள் தாக்கல் செய்த மனுவில், கடந்த நான்கு ஆண்டுகளாக 50 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.  

தற்போது அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு கூடுதலாக 30 சதவீத மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனால் தங்களுக்கு முதுநிலை மருத்துவப்படிப்பில், உரிய இடங்கள் கிடைப்பதில்லை. அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அல்லது ஊக்க மதிப்பெண் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து தமிழக அரசு வருகிற நவம்பர் 1ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: