தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன?... தலைமை செயலாளர் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவை அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள இச்சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக்கோரி கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் மனுவில், தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

 இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள். எந்த அவமரியாதையும் அவர்களுக்கு ஏற்படுத்தவில்லை. ஆனால் அரசு நிலங்களை சிலைகள் அமைக்க பயன்படுத்த கூடாது. எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள்  அமைப்பதை தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். அதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகள், பிறப்பித்த அறிவிப்புகள் குறித்து விரிவான அறிக்கையுடன், அரசின் நிலைப்பாட்டை தலைமை செயலாளர் தெரிவிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: