மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்கிறது.: 5 நாட்களில் 10 அடி உயர்ந்து, 105 அடியை தாண்டியது

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 நாட்களில் 10 அடி உயர்ந்து, 105 அடியை தாண்டியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் காவிரியின் துணை நதியான பாலாறு, தொப்பையாறு மற்றும் சின்னாறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த 22-ம் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 13,000 கனஅடி விதம் வந்துகொண்டிருந்த நீர் வரத்து, படிப்படியாக அதிகரித்து 40,000 கனஅடியாக இருந்தது. ஆனால் பின்னர் நீர் வரத்து குறைந்து வினாடிக்கு 37,167 கனஅடி உள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் 5 நாட்களில் 10 அடி உயர்ந்து, 105 அடியை தாண்டியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் மேட்டூர் அணை ஒரு வாரத்தில் அதன் முழுக்கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கனஅடியும் திறந்துவிடப்படுகிறது.

 மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நடப்பு நீர்ப்பாசன ஆண்டியின் காவிரி டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 40,000 கனஅடி நீர் வந்த நிலையில், இன்று வினாடிக்கு 30,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. இது மேலும் குறைவும் என பொதுப்பணித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து இரண்டாவது நாளாக வினாடிக்கு 7,600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Related Stories: