கொடநாடு கொலை வழக்கில் கைதான ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு: அதிமுக விஐபிக்களும் சிக்குகிறார்கள்

சேலம்: கொடநாடு கொலை வழக்கில் தகவல்களை மறைத்ததாக கைதான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் உள்பட 2 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தனிப்படை போலீசார் கோர்ட்டில் மனு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை தனிப்படையினர் மீண்டும் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் இறந்தார். இந்த வழக்கும் மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசாரும் ஆத்தூரில் முகாமிட்டு இதுபற்றி விசாரணை நடத்தினர். கனகராஜின் அண்ணன் தனபாலையும் (44), அவரது உறவினர் ரமேஷ் (34) என்பவரையும் 3 நாட்களாக வைத்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்த விசாரணையில், கனகராஜ் கொடநாடு பங்களாவில் கொள்ளையடிக்கச் செல்வது தெரிந்தும் அதிகாரிகள் விசாரணையில் அதுபற்றி தனபால் தெரிவிக்காமல் மறைத்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து தனபால், ரமேஷ் ஆகியோரை சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். ஜெயலலிதா பங்களாவில் கொள்ளையடித்து விட்டு திரும்பியபோது, என்னென்ன பொருட்களை, ஆவணங்களை தம்பி கனகராஜ் கொள்ளையடித்து வந்திருப்பார் என்ற விவரங்களும் தனபாலுக்கு தெரிந்திருக்கும். அவரிடம் என்னென்ன ஆவணங்கள் இருந்தது? அதை யாரிடம் கொடுத்தார்? ஜெயலலிதா வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கச் சொன்னது யார்? என்ற தகவலையும் தம்பி கனகராஜ் தெரிவித்திருப்பார் எனவும் தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகத்தான் அவர் தொடர்ந்து அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு இந்த கொலை, கொள்ளையில் தொடர்பு இருக்கிறது என கூறிவந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அவர் யாருக்காக இந்த கொள்ளை நடந்தது என்ற விவரத்தையும் தனிப்படை போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டனர். இதையடுத்து ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சோலூர்மட்டம் போலீசார் நேற்று மனு செய்தனர். அதில் தனபால், ரமேஷ் ஆகிய இருவரிடமும் 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டிருந்தது. விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி, அதிமுக விஐபிக்களும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கச் சொன்னது யார்? ஆவணங்களை யாரிடம் கொடுத்தார் என்ற தகவலையும் தனபாலிடம் தம்பி கனகராஜ் தெரிவித்திருப்பார்.

Related Stories: