திருத்துறைப்பூண்டியில் கால்நடைகளை அடைக்க பவுண்ட் அமைக்க வேண்டும்-நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி :  திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் தலைவர் வக்கீல் நாகராஜன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு திருத்துறைப்பூண்டி நகை சாலையில் வருவாய் துறைசார்பாக நகரத்தில் பவுண்டு பல ஆண்டுகளாக இயங்கி வந்தது.இந்த பவுண்டில் அனாதையாக சுற்றிவந்த ஆடுமாடுகள் அடைக்கப்பட்டு வந்தது. சாகுபடி வயல்களை சேதப்படுத்தும் கால்நடைகளை விவசாயிகள் பிடித்து வந்து அடைப்பதும் வழக்கமாக இருந்தது. தெரு பவுண்டடி தெரு என அழைக்கப்பட்டது.

தற்பொழுதுஅதே இடம் காலி மனையாக உள்ளது. பிறர் ஆக்கிரமிக்க வாய்ப்பு உள்ளது.நகரத்திலும் ஆடு மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகிறது. மேலும் விவசாய நிலங்களை சேதம் படுத்தும் கால்நடைகளை அடைக்க அதே இடத்தில் பவுண்ட் அமைக்கப்பட வேண்டும் என்று விவசாயிகளிடமிருந்து புகார் வந்துள்ளது.ஆதலால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து திருத்துறைப்பூண்டி நகரத்தில் பவுண்டுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் மீண்டும் பவுண்டு அமைக்க வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் முத்துக்குமரன் கூறிகையில் திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் மாடு ஆடுகளை அடைக்கும் பவுண்டடியாக இருந்த இடம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை கவனத்தில் கொண்டு விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டு பழையபடி அதே இடத்தில் பவுண்டு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: