திருநெல்வேலி மானூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஸ்ரீலேகா போட்டியின்றி தேர்வு

நெல்லை: திருநெல்வேலி மானூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஸ்ரீலேகா  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் புதிதாக  பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர்,  ராணிப்பேட்டை,  திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9  மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு  கட்டங்களாகவும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி  பிரதிநிதிகளுக்கான தேர்தல் கடந்த 9ம் தேதியும் நடைபெற்றது. இதற்கான வாக்கு  எண்ணிக்கை கடந்த 12ம்தேதி முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 5 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 137 கிராம  ஊராட்சி தலைவர்கள், 3221 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

151 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 1415  ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 2865 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 19964  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி  பெற்றனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த  ஊராட்சிகளில் நேற்று பதவியேற்றனர். இவர்கள் இன்று (22ம்தேதி) நடக்கும் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் வாக்களிக்கின்றனர். இன்று (22ம்தேதி) 9 மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், 9 மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், 3002 கிராம பஞ்சாயத்துகளின் துணைத்தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு காலை 10 மணி முதல் மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் திருநெல்வேலி மானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக 22 வயது இளம்பெண் ஸ்ரீலேகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுகவை சேர்ந்த ஸ்ரீலேகா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மானூர் ஒன்றியத்தின் கீழ் 41 கிராம ஊராட்சிகள் உள்ளன.

Related Stories: