132 குண்டுகள் முழங்க காவலர் நினைவு சின்னத்தில் டிஜிபி சைலேந்திரபாபு அஞ்சலி

சென்னை: நாடு முழுவதும் பணியின் போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் 132 குண்டுகள் முழங்க டிஜிபி சைலேந்திரபாபு அஞ்சலி செலுத்தினர்.இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் கடந்த 1959 அக்டோபர் 21ல் கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்து இருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள்  உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் காலவர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி வீரமரணம் அடைந்த வீரர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பதிலும், தேச விரோதிகள் மற்றும் கொடும் குற்றவாளிகளை கைது செய்ய முயலும் போது 377 காவலர்கள் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர்.இதை நினைவுகூரும் வகையில், நேற்று காலை தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதைதொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், முன்னாள் மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன், முன்னாள் டிஜிபிக்கள்  விஜயகுமார், டி.கே.ராஜேந்திரன், நட்ராஜ், தென் பிராந்திய முப்படையை சேர்ந்த அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது ஒரு சுற்றுக்கு 44 குண்டுகள் என 3 சுற்றுக்கு 132 துப்பாக்கி குண்டுகள் முழங்கியும், காவல் துறையில் இசை வாத்தியங்களோடு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories: