தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: விசாரணை ஆணையத்திடம் திருவள்ளூர் கலெக்டர் வாக்குமூலம்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 31வது கட்ட விசாரணையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜாண் வர்க்கீஸ் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22ம்தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாகினர். இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், இதுவரை 30 கட்ட விசாரணை நடத்தியுள்ளது.  

31வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில்  நேற்று துவங்கியது. இதில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், தடயவியல் நிபுணர்கள், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்த தாசில்தார்கள் உள்பட மொத்தம் 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் சிலர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். குறிப்பாக அப்போதைய மாநகராட்சி கமிஷனராக இருந்த, தற்போதைய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜாண் வர்க்கீஸ், ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

இதில் அவர் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன் போராட்டம் நடத்தியவர்களுடன் அதிகாரிகள் நடத்திய சமாதான கூட்டம் எதிலும் கலந்து கொண்டாரா என்று கேட்கப்பட்டதாக தெரிகிறது. இந்த விசாரணை வரும் 26ம்தேதி வரை நடக்கிறது.

Related Stories: