சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு விடுதலையான புதுச்சோரி ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை: மேல் முறையீட்டில் ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி, கலிதீர்த்தல்குப்பம் என்னுமிடத்தில் உள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் எர்லம் பெரைரா. இவர் எல்.கே.ஜி படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் மீது, திருபுவனை போலீசார் இவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரின் வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாகவும், மருத்துவ ஆதாரங்கள் வழக்குக்கு ஆதரவாக இல்லை எனவும் கூறி ஆசிரியரை விடுதலை செய்து கடந்த 2020 அக்டோபரில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து திருபுவனை போலீசார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் பரத சக்கரவர்த்தி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பாதிக்கப்பட்டது நான்கு வயது சிறுமி. சின்ன குழந்தை ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே மாதிரியாக வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆசிரியர் பெரைரா குற்றம் புரிந்துள்ளதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, அவரை விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. வழக்கின் புலன் விசாரணையில் உள்ள குறைகளால் குற்றவாளிகள் தப்பி விடுகிறார்கள். விசாரணையில் நடைபெறும் குளறுபடிகளை பயன்படுத்தி  குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கிறார்கள். இதுபோன்ற வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்கள் குறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை தேட வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: