நீட் தேர்வு ரிசல்ட் பயத்தால் தீ குளித்த மாணவி மருத்துவமனையில் மரணம்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த ஐயஞ்சேரி, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கமல்தாஸ்(41). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதேபோல் அவரது மனைவி ஷிபா கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே மகளான அனு (17). இவர் 12ம் வகுப்பை சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி பள்ளியில் படித்தார். இவர் சிறு வயதிலிருந்தே தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற கனவில் படித்துவந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் 12ம் தேதி ஆவடியில் உள்ள மையத்தில் நீட் தேர்வு எழுதி உள்ளார். இதனை தொடர்ந்து, தான் எழுதிய நீட் தேர்வில் தோல்வியை தழுவி விடுவோமோ என்ற அச்சத்தால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், 16ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.உடனே, அருகில் வசித்து வந்தவர்கள் அவரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  28 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: