கெங்கவல்லி: கெங்கவல்லி பஸ் ஸ்டாப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை வளாகத்தில், கடந்த 2ம் தேதி அரிய வகை குரங்கு ஒன்று சுற்றித்திரிந்தது. முகம் முழுவதும் கறுமையான நிறத்தில் காணப்பட்ட அந்த குரங்கு, லங்கூர் வகையைச் சேர்ந்தது என தகவல் பரவியது. உருவத்தில் சற்று பெரியதாக காணப்பட்ட அந்த குரங்கு, மருத்துவமனை பக்கமாக செல்வோர் மீது பாய்ந்து விடுவதுபோல் போக்கு காட்டி வந்ததால் மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், சேலம் மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்பேரில், தம்மம்பட்டி வனச்சரக அலுவலர் சந்திரசேகர் வழிகாட்டுதலின்படி, கெங்கவல்லி வனவர் சிலம்பரசன் தலைமையில் குரங்கை பாதுகாப்பாக பிடிப்பதற்காக 2 கூண்டுகள் வைக்கப்பட்டன.