இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர் 23 பேரை விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை:  முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடந்த 11-10-2021 அன்று நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி படகுகளில் மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்கள், 13-10-2021 அன்று, பாரம்பரிய மீன்பிடி தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காரைநகர் கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.  

இந்திய, இலங்கை மீனவர்களுக்கு இடையேயான இந்த நீண்டகால பிரச்சினையில் உடனடியாக இந்திய பிரதமர் தலையிட்டு, இப்பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்திட, உறுதியான வழிமுறைகளை காண வேண்டும். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட, இலங்கை அதிகாரிகளிடம் உறுதியாக, தீர்க்கமான முறையில் இந்த பிரச்சினையை எடுத்துச் சென்றிட இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு பிரதமர் வலியுறுத்த வேண்டும். மேலும், இலங்கை கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்திய பிரதமர், உரிய வழிமுறைகளை கையாண்டு, இதற்கு நிரந்தர தீர்வினை காண வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: